பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை – ரஷ்ய அதிபர் புதின் அதிரடி உத்தரவு!

ரஷ்யாவில் பாலின மாற்றம் மற்றும் திருநங்கையர் திருமணங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த பல ஆண்டுகலாகவே LGBTQIA+ சமூகத்தினருக்கு எதிராக…

ரஷ்யாவில் பாலின மாற்றம் மற்றும் திருநங்கையர் திருமணங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த பல ஆண்டுகலாகவே LGBTQIA+ சமூகத்தினருக்கு எதிராக பேசி வருகிறார். இந்த சமூகத்தினரால் பாரம்பரியமான குடும்பத்திற்கான மதிப்புகள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டி வந்தார். இதனால் சிறார்களிடையே பாரம்பரியமற்ற பாலியல் உறவுகளுக்கான பொது அங்கீகாரத்தை தடை செய்யும் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு தன்பாலினத்தவர் திருமணத்தை தடை செய்யும் சீர்திருத்தத்தை முன்வைத்தார்.

இந்நிலையில் ரஷ்யாவில் புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்துவதாக கோப்பு ஒன்றில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக ஒப்புதல் பெறப்பட்ட இந்த புதிய சட்டம், இனி அந்த நாட்டில் பாலின மாற்றம் மற்றும் திருநங்கையர்கள் திருமணம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கிறது.

இந்த புதிய சட்டத்தின்படி, “ஒரு நபரின் பாலினத்தை மாற்றுவதை நோக்கமாக கொண்ட எந்தவொரு மருத்துவ சிகிச்சையும்” தடை செய்யப்படுகிறது. மேலும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொது பதிவுகளில் ஒருவரின் பாலினத்தை மாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு, பாலினம் மாறிய நபர்கள் திருமணம் செய்து கொள்வது, மதபோதகர்களாக மாறுவது மற்றும் குழந்தைகளை தத்தெடுப்பது ஆகிய செயல்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதில் பிறவி முரண்பாடுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவத்திற்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்யா கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு LGBTQ+ சமூகத்தினர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், அரசாங்கங்கள் இந்த பிரச்னையில் தலையிட்டு, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள LGBTQ உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும், அனைத்து தனிநபர்களும் தங்கள் பாலின அடையாளம் அல்லது பாலியல் நிலையின் அடிப்படையில் கண்ணியமாகவும், பாகுபாடுகளுக்கு பயப்படாமலும் வாழ முடியும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.