அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்திற்கு அதிக அளவில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு, கடந்த ஒரு வாரத்தில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. இதனால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.
இதனைத் தொடர்ந்து, ரூ.20,000 கோடி மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் பணம் திரும்பி அளிக்கப்படும் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருவதன் எதிரொலியாக, உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.