“காந்தியின் தேவை தற்போதைய சூழலில் தான் மிகுதியாக உள்ளது” – முதலமைச்சர் #MKStalin!

“காந்தியடிகள் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள்…

“Gandhi is most needed in the present environment” - Chief Minister #MKStalin!

“காந்தியடிகள் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அவர்களும் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காந்தி ஜெயந்தி குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது.

இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காண விரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.