33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

பெட்ரோல் – டீசல் VS விலை உயர்வு : மத்திய அரசு VS – மாநில அரசு அதிகார போட்டி


மரிய ரீகன் சாமிக்கண்ணு

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு சில மாநிலங்கள் பொருட்கள் மீதான வரியை குறைக்க தயங்குவதே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதற்கு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே முன்வைத்தார். இதே போல, தெலங்கான முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் கடும் எதிர்வினையாற்றினர். இதில், ஒருபடி மேலே சென்று, நாங்கள் வரியை உயர்த்தவில்லை, யார் வரியை உயர்த்தினார்களோ அவர்களிடமே கேளுங்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் பதிலடி கொடுத்தார்.
இந்த இடத்தில் தான், மாநில அரசு விதிக்கும் வாட் வரி எனப்படும் மதிப்புக்கூட்டு வரியும் மத்திய அரசு விதிக்கும் செஸ் வரி எனப்படும் மேல் வரி என்றால் என்ன என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டி உள்ளது.

மாநில அரசின் வாட் வரி :
தமிழ்நாடு விற்பனை வரிச்சட்டம் 1937-38 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. விற்பனை வரியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக மதிப்புக் கூட்டு வரியை 2007ல் இருந்து தமிழ்நாடு அமல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய விரும்புபவர் தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர், தமிழ்நாட்டின் எல்லைக்குள் எங்கு வேண்டுமென்றாலும் தங்களின் பொருட்களை விற்பனை செய்யலாம். இதை Sale within Tamilnadu அதாவது, உள்ளூர் விற்பனை என்று அழைப்பார்கள். தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு விற்பனை வரிச்சட்டத்தின் படி எவ்வளவு வரி பெறலாம் என மாநில அரசு பட்டியலிட்டிருக்கும். இதனை, வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மாநில அரசு பெறும் வரியில், மத்திய அரசு தலையிடாது. இவ்வாறு பெறப்படும் வரியானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். வாட் என்று அழைக்கப்படும் மாநில அரசு பொருட்கள் மீது விதிக்கும் வரி தமிழ்நாட்டில் 20% என்றால், ஆந்திராவில் 30% இருக்கலாம். கேரளாவில் 10% இருக்கலாம். தெலங்கானாவில் 40% மேற்கு வங்கத்தில் 30% இருக்கலாம். ஏன் மாநிலங்கள் இவ்வளவு வரியை விதிக்கின்றன என மத்திய அரசு கேட்க முடியாது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மத்திய அரசின் செஸ் வரி :
மாநில அரசு விதிக்கும் வரிக்கு மேல் கூடுதலாக மத்திய அரசு விதிக்கும் வரி தான் செஸ் வரி என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு தனிநபரின் வருமானத்தின் மீதும் வாங்கும் பொருட்களின் மீதும் நேரடியாக விதிக்கப்படும் வரிக்கு பெயர் நேரடி வரி. அந்த வசூலிக்கப்படும் வரித் தொகையின் மீது குறிப்பிட்ட சதவிகிதத்தில் தனியாக விதிக்கப்படுவதுதான் ‘செஸ்’ (cess) வரி; அதாவது ஏற்கெனவே விதிக்கப்படும் வரிக்கு மேல் விதிக்கப்படும் கூடுதல் வரிதான் செஸ் வரி. மத்திய அரசு விதிக்கும் இந்த கூடுதல் வரியான செஸ் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இது, மாநில அரசுகளுக்கு நேரடியாக பலன் தராது. 100 ரூபாய்க்கு ஒரு சாமானியன் பெட்ரோல் போடுகிறார் என்றால், அதன் மீது மாநில அரசு வாட் வரியாக 13 ரூபாய் வரி விதிக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். இதன் மீது மத்திய அரசு விதிக்கும் கூடுதல் வரிதான் செஸ் வரி என்று அழைக்கப்படுகிறது.

மத்திய மாநில அரசுகளில் யார் வரி அதிகம்:
மாநில அரசுகள் விதிக்கும் வரியை விட மத்திய அரசு விதிக்கும் வரி மாநிலங்களுக்கு சுமையாக உள்ளதாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டுகின்றன. மதிப்பு கூட்டு வரியை எடுத்துக்கொண்டாலும் சரி பாஜக ஆளும் மாநிலங்களில் தான் மதிப்பு கூட்டு வரி அதிகம் இருக்கிறது. உத்தரப்பிரதேசம், அசாம், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அதிகமாக மதிப்பு கூட்டு வரியை விதிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 18 முறை கலால் வரியை அதிகரித்து 26 லட்சம் கோடியை பெற்றுள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய பொருட்களுக்கான வரி:
தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரிகளை விதிக்கின்றன. இருப்பினும், அதிகமாக வாட் வரியை வசூலித்த பிஜேபி ஆளும் மாநிலங்கள் கூட, நவம்பரில் தங்களின் வரியைக் குறைத்ததைப் பார்க்கலாம்.

பாஜக ஆளாத மாநிலங்கள் வரி விகிதம்:
மகாராஷ்ட்ராவில் 25% வாட் வரி வசூலிக்கப்படுகிறது. இதனோடு, மத்திய அரசின் கூடுதல் வரியாக 10.12 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் 25% அல்லது 13.12 ரூபாய் மாநில வரி பெறப்படுகிறது. இது தான் அதிக தொகையாக உள்ளது. தெலங்கானாவில் 35.20% வாட் வரியும், ஆந்திராவில் 31 சதவிகிதமும் வாட் வரி பெறப்படுகிறது. தமிழ்நாட்டில் 13 சதவிகிதத்துடன் 11.52 ரூபாய் வரியாக பெறப்படுகிறது.


இதே போல் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், 19.36 சதவிகிதத்துடன் 14.85 ரூபாய் கூடுதலாக வரி வசூலிக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 13.7 சதவிகிதம் வாட் வரியுடன் 4 சதவிகிதம் செஸ் வரியும் வசூலிக்கப்படுகிறது. ஹரியானாவில், 18.20 சதவிகிதத்துடன் 14.50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனுடன் மத்திய அரசின் மேல் வரியான செஸ் 5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல், மத்திய அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக வரிகளை வசூலிக்கிறது. அதாவது, சாலை மேம்பாட்டிற்கு, கல்விக்கு மருத்துவத்திற்கு, வேளாண் துறைக்கு என பல்வேறு துறைகளுக்கான இந்த செஸ் வரி விதிக்கப்படும். ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக கூட செஸ் வரி மூலம் வரி வசூலிக்கப்பட்டது. இந்த வரியினை எந்த ஒரு பொருள் மீதும் விதிப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது சிகரெட் மீது கூட செஸ் வரி விதிக்கப்பட்டது. அதாவது, இந்த செஸ் வரியை மத்திய அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். எந்த மாநிலத்தின் மீது வரியை விதிக்கிறதோ மத்திய அரசு அந்த மாநிலங்களிடம் இருந்து முழு தொகையை எடுத்துக்கொள்ளலாம். மாநில அரசுகளுக்கு, மக்களுக்கு வரியை பகிர்ந்து அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல, மாநிலங்களின் வரிவிதிக்கும் பரப்பு எல்லையை இதன் மூலம் தடுக்க முடியும். தற்போது, செஸ் வரியானது கல்விக்காக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், வசூலிக்கப்படும் தொகையானது கடந்த 2022-23 மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படவில்லை என்பது தான் துரதிருஷ்டவசமானது. அதே போல், அதிக இடங்களில் மாநில அரசுகள் தான் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. செஸ் மூலம் பெறப்படும் தொகையானது மாநில அரசுகளுக்கும் ஒதுக்கப்படுவதில்லை. பெரும்பாலான தொகைகள் ராணுவத்திற்கே ஒதுக்கப்படுகின்றன. இந்த பின்னணியில் பார்த்தால், பெட்ரோல் – டீசல் உற்பத்திக்கு ஆகும் செலவை விட மேல் வரி விதிப்பானது பல மடங்கு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்திவிடுகிறது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஏன்:
இந்தியாவின் தேவையான கச்சா எண்ணெய்யை விட இரு மடங்கிற்கும் அதிகமான அளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய்யை அதிக அளவு இறக்குமதி செய்யும் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வானது பல மடங்கு அதிகரிக்கிறது என்பது முரண்பாடான தகவலாகவே உள்ளது. இதற்கு காரணம், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே என்றால் அது தான் உண்மை. தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் மாநில அரசுகள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டுகிறார். இதற்கு முன்பு, ரஷ்யா – உக்ரைன் போர் என்று கூறினார்கள். ஆனால், ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து கொண்டிருந்த கடந்த 3 மாதங்களில் எண்ணெய் வளத்திற்காக ரஷ்யாவை சார்ந்துள்ள ஜெர்மனி, இங்கிலாந்தில் கூட விலை உயரவில்லை என்பதை பார்க்கலாம்.
ஆக மொத்தத்தில், பெட்ரோல் – டீசல் விலை உயர்வை ஒட்டி மத்திய மாநில அரசுகளுக்கு இடையே வரி விதிப்பு கொள்கையில் முரண்பாடு தோன்றியுள்ளது. இதில், யாருக்கு அதிகாரம் என்பதை தாண்டி, இதில், சாமானியர்கள் பாதிக்கப்படுவதை இரு அரசுகளும் உணர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் அதிருப்தியை குறைக்கவாவது பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading