தன்னால் உதவி பெற்றவர்கள் தன் காலில் விழுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள நடிகர் ராகவாலாரன்ஸ், இனி உதவி கேட்டு வருபவர்களின் காலில் விழுந்து தான் ஆசீர்வாதம் வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவாலாரன்ஸ் திரைத்துறையில் நடிப்பதை தாண்டி ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இனி தான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன் தெரிவித்துள்ளார்.நான் உதவி செய்பவர்கள் என் காலில் விழக்கூடாது என்றும், அவர்கள் காலில் தான் நான் விழுந்து என் சேவையைச் செய்வேன் என்றும் புது முடிவை எடுத்துள்ளார். எனக்குள் நான் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று நான் முதல் அடி எடுத்து வைக்கிறேன்.உதவிக்காக ஏழைகள், பணக்காரர்களின் காலில் விழுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நான் தனிப்பட்ட முறையில் பார்காமல் அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு குடும்பம் தன் குழந்தைக்கு திறந்த இதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு என் காலில் விழுந்து விட்டார்கள். அதை நான் ஏற்கவில்லை, உதவிக்காக பெற்றோர்கள் காலில் விழுந்தவுடன் அந்த குழந்தை உடனடியாக அழத்தொடங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெற்றோர்களும், குழந்தைகளும் படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ளவும், உணரவும் முடிகிறது. ஏனென்றால் எந்த தந்தையும் தங்கள் குழந்தைகளின் முன்பு ஒரு ஹீரோவாக இருக்க தான் விரும்புவார். பணக்காரர்களிடம் பணம் இருப்பதால், அவர்களின் காலில் விழுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன். மேலும், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என் காலில் விழ வைக்கிறார்கள்.கடவுளும் குழந்தைகளும் ஒன்று என நான் நம்புகிறேன். சில சமயங்களில், நான் கிராமங்களுக்குச் சென்று என் தாய் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவும்போது, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். எனவே இனிமேல் நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன், இதன் மூலம் எனது சிறிய ஈகோவும் மறைந்துவிடும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.