பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டிகள் மற்றும் சேலைகள், 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி சேலை வழங்கும் திட்டம், தமிழ்நாடு அரசால் 1983ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2,664 கைத்தறி நெசவாளர்கள், 11,124 பெடல்தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பளிக்கும் திட்டத்திற்கான நூல் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகள் நடைபெற்று வருகின்றது. சுமார் 3.59 கோடி பேர் பயன்பெறும் அந்தத் திட்டத்திற்காக ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியை மேற்கொள்ளும் நிலையில் அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி, நிதித்துறை, கைத்தறித்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாணவர்களுக்கான சீருடை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வரும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வடிவமைப்புகளில் வேட்டி, சேலை உற்பத்தியாகி வருகிறது. 10 வருடங்களுக்கு பிறகு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், 15 வடிவமைப்புகள் கொண்ட சேலைகளும், 5 விதமான பார்டர்கள் கொண்ட வேட்டிகளும் வழங்கப்படவுள்ளது. 2023 ஜனவரி 10ஆம் தேதிக்குள் வேட்டி, சேலை விநியோகத்தை முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்திற்குப் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளை நேரில் ஆய்வு செய்தார்