மின்சார சட்டத் திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு வராது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி
மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணிமண்டபத்தில்
உள்ள பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேசிய கொடியேற்றுவதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி வாகைக்குளம்
விமான நிலையம் வருகை தந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர
மோடி மூவர்ண தேசியக் கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்றுவதற்காக வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசம் முழுவதுமே தினந்தோறும் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அதன்படி, பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியாருக்கு மரியாதை செய்ய இருக்கின்றோம். பாரத தேசத்திற்காக பாடுபட்ட முன்னோர்கள் பற்றியும், தியாகிகள் பற்றியும் இளைஞர்கள் அறிய தேசிய கொடி ஏற்ற வேண்டும். தேசியக் கொடியின் மகிமையும், பெருமையும் கொடி காத்த குமரனுக்கே. இறக்கும் தருவாயில் கூட தேசிய கொடியினை கைகளில் ஏந்தினார் அது தமிழகத்திற்குப் பெருமை. நம்முடைய அனைத்து வீடுகளிலும், சகோதர, சகோதரிகள், உறவினர்கள் அனைவரும் 13 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரை அவர்களுடைய வீட்டில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.
போதைப் பொருள் ஒழிப்பு சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு, போதைப் பொருளை ஒழிப்பது மிகவும் முக்கியம். தமிழகத்தில் அதிகளவில் போதை பொருள் புழக்கத்தில் இருப்பது கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது. தமிழக அரசாங்கம் முக்கியமான, உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின்சார சட்ட மசோதாவில் நாட்டில் பல சீர் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மின்சார சட்டம் எந்தவித இலவச மின்சாரத்தையும் நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை. அச்சட்டம் வந்த பின்பு தான் தெரியும்.
அக்னிபத் திட்டத்திற்கு வரவேற்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் எழுப்பிய
கேள்விக்கு, நம்முடைய இளைஞர்கள் இன்றைக்கு தானாக முன்வந்து ராணுவத்தில்
பணியாற்ற வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது. பலபேர் அக்னிபத்
திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில்
பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பல லட்சம் இளைஞர்கள் தானாக முன்வந்து தங்களைப் பதிவு செய்து கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை காசி மேடு துறைமுகத்தை புதுப்பிக்க டெண்டர் விடப்படவுள்ளது. 20க்கும் மேற்பட்ட துறைமுகங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
-ம.பவித்ரா