சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு செல்ல இலவசமாக மெட்ரோவில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை பார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி 2024 (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 1-ந் 2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் நடைபெற உள்ளது.
தெற்காசியாவிலேயே இரவு நேர பார்முலா4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்த நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ QR பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.
“Paytm Insider” மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த மெட்ரோ பாசை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் கார் ரேசிங் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.
நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். Paytm இன்சைடர் என்பதன் மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்தச் சலுகைக்குவேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் கார் ரேசை காண வரும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







