கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் தீவிரப் போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக அதிபர் பதவியை விட்டு ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே.
முதலில் மாலத்தீவுகள், அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பின்னர் அங்கிருந்து தாய்லாந்துக்குச் சென்றார் ராஜபக்சே.
மீண்டும் அவரை நாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவ்வாறான சூழ்நிலையில் கோத்தபய ராஜபக்சே நாளை நாடு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்தில் சில வாரங்கள் தங்கிய நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் அதிபரின் சிறப்புரிமைகளை அவர் அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் தேதி கோத்தபய இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு பிறகு ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டன.
கோத்தபய நாடு திரும்பும்போது மகத்தான வரவேற்பு நிகழ்வு ஒன்றை பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்திருந்தது. எனினும் அவர் நாடு திரும்பும்போது அவ்வாறான எந்த வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பியதும் அவரை கொண்டு பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








