முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில், நிரந்தர வைப்புத்தொகையை முடக்கக் கோரி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நிரந்தர வைப்புத் தொகைக்கான வங்கி ரசீதுகளை பறிமுதல் செய்தது. இதுதொடர்பான வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்புத் தொகை விசாரணை அதிகாரிகளால் முடக்கப்பட்ட நிலையில், நிரந்தர வைப்பீடுகள் மீதான முடக்கத்தை நீக்க கோரிய மனுக்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடியும் வரை, நிரந்தர வைப்பீடுகளை முடக்கக்
கோரி, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றவியல் நடைமுறைப்படி லஞ்ச ஒழிப்புத்துறை மனுத்தாக்கல் செய்யவில்லை என எஸ்.பி.வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவியல் நடைமுறைப்படி கூடுதல் மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 5ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை நிரந்தர வைப்புத் தொகைகளை முடக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீட்டித்தார்.







