உத்திரபிரதேசத்தின் மீரட் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் பிரவீன்குமாா் மற்றும் அவரது மகன் பயணித்த காா், சரக்கு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 68 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 வயதான இவர் தற்போது மீரட் நகரில் ரியல் எஸ்டேட் மற்றும் உணவகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.
இவர் கடந்த செவ்வாய் அன்று இரவு 9.30 மணியளவில் பாண்டவ் நகரிலுள்ள உறவினா் வீட்டிலிருந்து அவரது முல்தான் நகா் வீட்டுக்கு தனது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது காவல் துறை ஆணையரின் இல்லம் அருகே பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து பிரவீன் குமார் வந்த காரின் பின்பக்கம் மோதியது.
இதில், பிரவீன்குமாா் மற்றும் அவரது மகன் இருவரும் காயமின்றி தப்பினா். இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனா். கடந்த ஆண்டு டிசம்பரில், டெல்லியில் காா் விபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரா் ரிஷப் பந்த் பலத்த காயமடைந்து மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.







