7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார்.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசனின் 67வது பிறந்தநாள் வரும் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் ”ஐயமிட்டு உண்” என்ற பெயரில் 9 வாகனங்களில் சுமார் 7,000 பேருக்கான உணவை வழங்கும் நிகழ்வை கமல்ஹாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று தொடங்கி நவம்பர் 7ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய கமல்ஹாசன், “பட்டினி பட்டியலில் இந்தியா பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதை எனது பிறந்தநாள் என்று செய்யவில்லை. அரசியல் குறியீடு என்றே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
அரசு செய்ய வேண்டியதை மக்கள் நீதி மய்யம் நினைவுபடுத்துகிறது எனவும் கூறிய கமல்ஹாசன், மருந்துக்கு நிகராக உணவு உள்ளது, பல நபர்கள் இது கிடைக்காமல் உள்ளனர், நிரந்தரமாக நம் ஏழைகளை பிடித்துக் கொண்டிருக்கும் நோய் பசி, இன்று நாம் கொடி அசைத்துத் துவங்கி வைப்பது அன்னக்கொடி எனவும் கூறினார்.







