இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க
வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்
மீனவர் சங்கத் தலைவர் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறியதாவது:
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் படைகளையும் உடனே விடுவிக்க வேண்டும். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 115 படகுகளுக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
இதில் எஞ்சிய 7 படகுகளுக்கும் அதே போல சேதமடைந்த 30 படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
வரலாறு காணாத டீசல் விலை உயர்வு காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசால் வழங்கி வருகின்ற 1,800 லிட்டர் மானிய டீசலை 3,000 லிட்டராக உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதே போல மேற்கொண்டுள்ள தீர்மானங்களை வலியுறுத்தியும் மத்திய-மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வரும் செவ்வாய்க்கிழமை 13 ம் தேதி தங்கச்சிமடம் வலசை தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொழிலில் நேரடியாகவும் சார்பு தொழிலாகவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் ஜேசுராஜா.