இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் ஒருபகுதியாக நாளை மறுநாள் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த 9ஆம் தேதி அன்று நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றிருந்த 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் அவர்களின் சிறைக்காலம் வரும் 21ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.







