கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில், கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவன வளாகத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடங்களில் இருந்து வெளியேறிய கரும்புகையால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சீரம் நிறுவனத்தின் முதல் நுழைவுவாயில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்குள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து சம்பவம், தடுப்பூசி உற்பத்தியை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.







