நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது-30), இவருக்கும் ராசி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ராசியின் கனவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். ராசி கடந்த 2020-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். இந்நிலையில், அவர் மருத்துவ உயர் படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக ராசி, மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
இதற்கிடையே நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக ராசிக்கு மனதில் தொடர்ந்து பயம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ராசி வீட்டின் 3-வது மாடியில் படிக்க சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் மதியம் உணவு சாப்பிட வரவில்லை என்பதால், அவரது தாயார் பிற்பகல் 3 மணி அளவில் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அறைக்கதவு உள்பக்கம் பூட்டப்பட்டுள்ளதை பார்த்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து பலமுறை கதவை தட்டியும் ராசி கதவை திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார், மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்த ராசியின் தாயார் அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார். இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடிவந்து பார்த்து போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார், உயிரை மாய்த்துக் கொண்ட டாக்டர் ராசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








