பண்ருட்டி அருகே மது குடித்ததை தட்டிக் கேட்டதால் குழவிக் கல்லை தலையில் போட்டு பள்ளி மாணவனை கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் இருளர்
குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் (38). இவருடைய மனைவி சுமதி. இந்த
தம்பதிக்கு 2 மகள்களும், அர்ஜூனன் (14) என்ற மகனும் உள்ளனர். இதில் அர்ஜூனன்,
அங்குசெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
முருகன் சிறுவத்தூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் குடும்பத்தினருடன் தங்கி
வேலை பார்த்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன் – மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று முருகன் மது குடித்துவிட்டு வந்து சுமதியிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அர்ஜூனன், தனது தந்தையிடம் ஏன் இப்படி மது குடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்து வருகிறீர்கள் என கூறி தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து, முருகன் அங்கிருந்து சென்றுவிட பின்னர் அர்ஜூனன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் மது குடித்துவிட்டு முருகன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து, அவரை தாக்க முயன்றுள்ளார். அவரிடம் இருந்து சுமதி தப்பி ஓடிய நிலையில் மதுபோதையில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த முருகன் தனது மகன் என்றும் பாராமல் அங்கு
தூங்கிக் கொண்டிருந்த அர்ஜூனனின் தலையில் குழவிக் கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.
இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அர்ஜூனன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அர்ஜூனன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
மது போதையில் பெற்ற மகன் மீது குழவி கல்லை தூக்கிப்போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-ம.பவித்ரா