தென்காசி பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவ மழையையொட்டி தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடையநல்லூர், வடகரை, பண்பொழி இலத்தூர் அச்சன்புதூர், சாம்பவர் வடகரை, சுரண்டை ஆகிய பகுதிகளில் தற்போது பல நூறு ஏக்கர் விவசாய பகுதிகளில் சின்னவெங்காயம் நடவு செய்யும் பனிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சின்ன வெங்காயம் விவசாயம்:
தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரப்பகுதியில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படுகிறது. வெங்காய சாகுபடிக்கு களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், மருந்து தெளித்தல் என ஏக்கருக்கு ரூ.60,000 வரை செலவாகிறது. சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து 4 முதல் 5 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்து விலை அதிகமான நேரங்களில் விற்பனை செய்யவும் முடியும்.
வெங்காயத்தை இருப்பு வைப்பதால் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது. சின்ன வெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். சின்ன வெங்காயம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் 2, 3 நாட்கள் வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த முறை ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலேயே தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.