கட்டண உயர்வு எதிரொலி – தமிழ்நாட்டின் பல இடங்களில் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்.!

சுங்கச் சாவடிக் கட்டண உயர்வு எதிரொலியாக தமிழ்நாட்டின் பல இடங்களில் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல்…

சுங்கச் சாவடிக் கட்டண உயர்வு எதிரொலியாக தமிழ்நாட்டின் பல இடங்களில் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் திண்டுக்கல், திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில்  நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கார், வேன்,ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 இல் இருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுங்கச் சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததையொட்டி பல சுங்கச் சாவடிகள் கட்டணம் உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் திண்டுக்கல், திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் 5- ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூர் கருத்தம்பட்டியில் சுங்கச் சாவடியில் கட்டண உயர்வைக் கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல பரனூர் சுங்கசாவடியை அகற்றகோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)சார்பில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியையும் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.