காஞ்சிபுரத்தை சேர்ந்த ரசிகரின் திருமண வரவேற்பு விழாவில் போன் செய்து
வாழ்த்து தெரிவித்து சந்தோஷப்படுத்தினார் நடிகர் சூர்யா. அப்போது ஒருவரை ஒருவர் மனதை புரிந்து கொண்டு பேசிக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரான
இவருக்கும், அவரைப் போலவே தீவிர ரசிகையாக இருந்த லாவண்யா என்பவருக்கும்
திருமணம் கடந்த ஒன்றாம் தேதி கோயிலில் நடைபெற்ற நிலையில், நேற்று திருமண
மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள்,
என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், திடீரென கணேஷின்
செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதனை எடுத்து பார்த்த பொழுது, திரைப்பட
நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி
ஏற்படுத்தினார்.
மேலும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்
கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய சூர்யா, திருமண வாழ்த்து கூறினார். மேலும்
தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து சந்திப்பதாக கூறினார்.
திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே தங்களின் அபிமான நடிகர் வாழ்த்துக் கூறிய
சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்கள்.
தனது தீவிர ரசிகர் – ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்துக் கூறிய சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.








