சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி, குடும்ப அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து ஏழு குடும்பத்தாரர்கள் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்துள்ள நெற்குப்பை பூசனிக்குளம் கிராமத்தை
சேர்ந்தவர்கள் ஏ.எல்.சுப்ரமணியன், சொக்கலிங்கம், சேவுகன், குமார், சொக்கலிங்கம்,
முருகேசன் மற்றும் பாலதண்டாயுதம் ஆகிய 7 குடும்பத்தினர்கள். இவர்களை கடந்த 12
ஆண்டுகளாக காரணம் ஏதும் கூறாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்பு கிராம கோவில் வரி கட்ட இந்த 7 குடும்பத்தாருக்கும் கிராமத்தின் சார்பில், தகவல் தெரிவிக்காததால் இவர்கள் வரி கட்டவில்லை.
இந்நிலையில், இவர்கள் 7 குடும்பத்தாருக்கும் கிராமம் சார்பில் அபராதமும் விதித்துள்ளனர். மேலும், ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதன் காரணமாக, இந்த ஏழு குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, பள்ளியிலும் மற்ற சக மாணவர்கள் இந்த குழந்தைகளுடன் பேசுவதோ பழகுவதோ இல்லை. மேலும், குடிக்க தண்ணீர் கேட்டால் கூட சக மாணவர்கள் கொடுக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இது குறித்து காவல்துறை, வருவாய்த்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அந்த குடும்ப உறுப்பினர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில், தங்களது குடும்ப அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். மேலும், மனுவை பெற்றுக்கொண்ட டி.ஆர்.ஒ மணிவன்னன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் திரும்பி சென்றனர்.
—-கு.பாலமுருகன்