பேச்சுவார்த்தை தோல்வி; 5வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இடைநிலை ஆசிரியர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இடைநிலை ஆசிரியர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தையை மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன் கடந்த 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 140-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்ளுடன் தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆகியோர் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால், 5வது நாளாக ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.