கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ள நிலையில், தற்போது பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பண்டிகை விடுமுறையை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் தனியார் பேருந்துக் கட்டணம் அதிக அளவில் நிர்ணயிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்திருந்தன. தமிழ்நாட்டில் விமானக் கட்டணத்துக்கு இணையாக தனியார் பேருந்துக் கட்டணம் இருப்பதாகவும் ஆளும் கட்சியினருக்கும், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறதோ என்று பொதுமக்கள் எண்ணக்கூடிய அளவிற்கு இந்த கட்டண உயர்வு இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் தலைமையில் கடந்த 11.10.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்தல் சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சரின் உத்தரவின்படி , 13.10.2021 முதல் 20.10.2021 வரை தமிழகம் முழுவதும் ஆம்னிப் பேருந்துகளுக்கான சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்கு போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகள் மற்றும் தமிழ்நாட்டிற்குரிய வரி செலுத்ததாத ஆம்னிப் பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆம்னிப் பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.








