கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பகால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட…

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பகால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்), நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன.

இந்நிலையில், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் 120 இடங்கள், நாமக்கல், திருநெல்வேலி, தஞ்சாவூர் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தலா 100 இடங்கள், சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுரோடு ஆகியவற்றில் 80 இடங்கங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழம் தெரிவித்திருந்தது.

மேலும் தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 40 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதைத்தவிர பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் கொடுவளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் கொடுவளியில் 20 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12-ந் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு, பி.டெக் படிப்பிற்கும் 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதனிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு அக்டோபர் 3-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கும் மாணவர்கள் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தர் செல்வகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணி வரையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.