யூ.ஜி.சி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிதற்கான கால அவகாசத்தை 30-ந்தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு தேர்வுகளும் ஒன்றாக இந்த முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் கடந்த 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்வர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று UGC – NET தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் https://ugcnet.nta.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வு தேதி, ஹால் டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.








