சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சில மாநிலங்களில் ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் நீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய மற்றும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய சர்வதேச பயணிகள் விமான சேவை, வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடை உத்தரவு, சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுளளது.








