சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின் படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என தெரிவித்துள்ளது.
130 இணைப்புக் கல்லூரிகளில் B.A., B.Sc., B.Com., BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கும் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பிறகு பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் ஐந்து நாள்கள் நீட்டித்தது.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில், கடந்தாண்டை காட்டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பப்பித்துள்ளனர். எனவே, மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால் சென்னை பல்கலைக்கழகம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








