பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் இல்லம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே இன்று வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று மாலை 4.30 மணியளவில் பகவந்த் மான் வீடு அருகே உள்ள மாந்தோப்பில் இந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை மாந்தோப்பில் வேலை செய்து வந்த நபர் கண்டுபிடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதுகுறித்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு மற்றும் அவர் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகே ஆகும்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சமயம் முதலமைச்சர் பகவந்த் மான் அந்த வீட்டில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.