முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில்…

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பாக மத்திய அரசு
வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயர் நீதிமன்றம்
நிராகரித்தது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில்
விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு
விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், இந்த மனுவை ஒற்றை நீதிபதி தான் விசாரிக்க
வேண்டும் எனவும் ஆட்சேபம் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு, வேலுமணி சார்பில் ஆஜராக எதிர்ப்பு
தெரிவித்த தலைமை வழக்கறிஞர், வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான
வரித் துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் வருமான வரித் துறைக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜு எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் எனக் கேள்வி
எழுப்பினார்.

இந்த மனு தொடர்பாக கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதால் அவகாசம் வழ்ங்க
வேண்டும் எனவும் கோரினார்.

வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகளை விளக்கிய தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது
ஜின்னா, சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு சாதகமாக ஒப்பந்தங்களை வழங்கிய
வேலுமணி, தன்னை வளப்படுத்திக் கொண்டது, அதிகார துஷ்பிரயோகம் என வாதிட்டார்.

மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆஜராகி வருவதாக வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொது நல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த குற்றவியல் பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சேர்த்து தான் விசாரிக்கபட்டன என்பதால், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள குற்றவியல் மனுவை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், எந்த ஆதாரமும் இல்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை புறக்கணித்து விட்டு, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.


இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய வேலுமணியின் மனுவை விசாரிக்க
அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் தொடர்பாக, தலைமை நீதிபதி அமர்வு
இன்று உத்தரவு பிறப்பித்தது.

டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல்
செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,
வேலுமணி மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான விசாரணையை
செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜராக மத்திய அரசு
அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த அனுமதி திரும்பப் பெறப்படாததால்
இதுசம்பந்தமான தமிழக அரசு ஆட்சேபம் நிராகரிக்கப்படுகிறது எனவும் நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.