போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் அதற்கென்று தனிக்குழு அமைத்தும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கூறினார்.
மருந்து வகைகள் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், மருத்துவத் துறையுடன் ஒருங்கிணைந்து காவல் அதிகாரிகள் செயல்பட்டு, மருந்துக் கடைகளில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.




