உலக முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று இந்தியா மட்டுமல்லாது மேலும் 5 நாடுகள் தங்களது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுகின்றன.
இந்திய திருநாட்டை பொறுத்தவரை இன்று நாடு முழுவதும் 77-ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்கள் தங்களது ரத்தத்தை வியர்வையாக சிந்தி ஆங்கிலேயரிடம் இருந்து 1947-ல் வாங்கி தந்த சுதந்திரத்தை தேசம் முழுவதும் உள்ள 140 கோடி மக்கள் பெரும் மகிழ்வுடன் இன்று கொண்டாடி வருகின்றனர்.
பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள் என வேறுபாடுகள் பல இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை ஒரு மனதாக அனைவரும் ஏற்று இச்சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நம் நாடு மட்டுமல்லாது உலகின் வேறு சில நாடுகளும் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. இதன்படி தென் கொரியா, வட கொரியா, பெஹ்ரைன், காங்கோ மற்றும் லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளிலும் இன்று தான் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜப்பானின் ஆளுகையில் இருந்து தென் கொரியா விடுபட்டது. இதே போன்று வட கொரியாவும் இன்று தான் தேசிய விடுதலை நாளாக கொண்டாடுகிறது.
1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து பெஹ்ரைன் விடுதலை பெற்றது. இதே போன்று காங்கோ நாடு பிரான்ஸிடம் இருந்து 1960-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது.
சிறிய ஐரோப்பிய நாடான லீக்டன்ஸ்டைன் 1866-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-15-ஆம் தேதி ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்று தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.







