”தாமதமாக இருந்தாலும் சரியானதாக  அமையவில்லை” – பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்து காங்கிரஸ் விமர்சனம்!

பிரச்சாரத்திற்கும், உலகபயணத்திற்கும் நேரம் உள்ள பிரதமர் மோடி மணிப்பூரில் 5 மணி நேரத்திற்கும் குறைவாக செலவிட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களிடயே பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தால் 260 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை இழந்தனர்.

இந்த நிலையில் 24 மாதங்கள் கழித்து இன்று பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனிடையே காங்கிரச் கட்சியினர் பிரதமரின் பயணம் 5 மணி நேரத்திற்கும் குறைவாக இருந்ததாக விமர்சித்துளனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலார் ஜெய்ராம் ரமேஷ்,

”மணிப்பூர் மக்கள் கலவரத்தால் கடந்த 28 மாதங்களாக மிகுந்த வலி, துயரம், துன்பம் மற்றும் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

பிரதமரின் வருகைக்காக மணிப்பூர் மக்கள் பொறுமையாகக் காத்திருந்தனர். இறுதியாக இன்று  பிரதமர் மணிப்பூர் வந்தார். ஆனால் அவர் மாநிலத்தில் தரையிறங்கியதிலிருந்து புறப்படும் வரை காலம் 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்தது.

பிரச்சாரம் செய்வதற்கும், உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கும் பிரதமருக்கு நேரம் உள்ளது.  மணிப்பூர் மீதான அவரின் மதிப்பு இவ்வளவு தானா..? இது அதிர்ச்சியூட்டுகிறது. தாமதமாக சென்றிருந்தாலும் இது சரியானதாக  அமையவில்லை”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.