ராவணன், பாபர், ஔரங்கசீப் போன்றவர்களால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெளவில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
”சனாதன தர்மத்தின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது மனிதகுலத்திற்கு ஆபத்து. சனாதன தர்மத்தை இழிவாகப் பேசுபவர்கள் தங்கள் செயல்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். வரலாற்றுரீதியாக அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் அவர்களுக்கான தேவையின் போது, அவர்களின் நம்பிக்கைகளுக்கு சனாதன தர்மம் ஆதரவாக இருந்துள்ளது. ராவணன், பாபர், ஔரங்கசீப் போன்ற வரலாற்று நாயகர்களால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை.
சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் கஷ்டத்தில் இருக்கும் பிற மதத்தினருக்கு உதவாமல் இருந்ததில்லை. நாங்கள் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவர்கள் என்று ஒருபோதும் சொல்லவில்லை. உண்மை ஒன்றுதான் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஞானிகள் வெவ்வேறு விகிதங்களில் இதனைப் பார்க்கின்றனர். ” இவ்வாறு அவர் தெரிவித்தார்.







