சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன் – மு.க. ஸ்டாலின் பேச்சு…!

சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் தான் இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் முன்னாள் திமுக அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

நாட்டில் மின்வெட்டுப் பிரச்சனை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை என்பது போன்ற பிரச்சனைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்தோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லி பேசினார். ஆனால் முதலமைச்சராக உள்ளவர் எங்கே உங்கள் அப்பாவை காணோம் என்றார். அப்பாவை அங்கே தேடாதீர்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன். கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாக தான் பணியாற்றி வருகிறேன். முதல்வராக இருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றிருக்கிறேன். என் போல வேறு யாரும் ஆய்வு கூட்டம் நடத்தியிருக்க மாட்டார்கள்.

கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன. அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள். மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுதிட்டுள்ளேன். அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன்.

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும், இந்த மாநிலம் உள்ளவரை நான் தான் முதலமைச்சர் என்று அண்ணா சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின் தான் முதல்வர்.

கருணாநிதி கூட்டணி அமைத்தால், அவர்களாகத்தான் போவார்களே தவிர, வெளியேற்ற மாட்டார். அந்த வழியில் தான் நானும் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனையும் பரிசீலிப்போம். இவ்வாறு பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.