சென்னையில் உள்ள கூட்டுறவு விற்பனை கடைகளில் இன்று முதல் கொள்முதல் விலைக்கே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதுமே தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தரவர்க்க மக்களும், ஏழை மக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நாடு முழுவதுமே விலையேற்றம் பேசுபொருளாகியுள்ள நிலையில், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக தமிழ்நாடு உணவுத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொது மக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்க முடிவு செய்யப்பட்டது.
மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை நடைபெற்ற ஆலோசனையில் சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி உள்ளிட்டவை கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 500 கிராம் 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







