அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில் உதித்த சமத்துவ சூரியன் அண்ணல் அம்பேத்கர் என்றும், சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலம் சமப்படுத்திய போராளி அம்பேத்கர் என்றும், சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தை தனது பரந்த அறிவால் விடிய வைத்தவர் அம்பேத்கர் என்றும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அம்பேத்கர், வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர் என்று கூறிய முதலமைச்சர், அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரது முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும், அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அதிமுக, பாஜக உள்ளிட்ட சர்வ கட்சிகளும் வரவேற்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதில்,
“சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்
சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,
ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,
எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,
சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும்,
சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.” என சமத்துவ நாள் உறுதிமொழியாக அரசாணை வெளியீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.