உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக கையொப்பமிட கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தங்களின் 29.06.2022ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகையின் வாயிலாக தெரிந்துகொண்டேன். பின்னர் மகாலிங்கம் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.
ஆதலால், அந்தச் சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்றது. கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
21.6.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உள்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர்.
4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்புடையதாக இல்லை.
அதேபோல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்துள்ளதை அடுத்து, இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். வரும் ஜூலை 9ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் முக்கியத் தலைவர்களான இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏ மற்றும் பி படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தில் ஏ மற்றும் பி படிவங்களை அனுப்பி வைக்குமாறு அவர் கோரியிருந்தார்.
-மணிகண்டன்