அதிமுகவில் கடந்த ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடந்த ஜூலை 11ந்தேதி கூட்டிய பொதுக்குழுவில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த பொதுக் குழு கூட்டடத்திற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அம்மன் வைரமுத்து ஆகியோர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவில் ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் மூலம் அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை நிலையே தொடர்வது உறுதியாகியுள்ளது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக அவர் மேற்கொண்ட நியமனங்கள் மற்றும் நீக்கங்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்த உத்தரவின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஜூன் 23ந்தேதிக்கு முன் மேற்கொண்ட நடவடிக்கைகளே செல்லும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில், தமது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, உயர்நீதிமன்ற உத்தரவால் தங்கள் தரப்பிற்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறினார். தீர்ப்பு குறித்த நகல் வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.