#EPS மீதான அவதூறு வழக்கு | செப்.19க்கு தள்ளிவைப்பு – அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறுவது என்ன?

எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்…

எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான இபிஎஸ், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதாக அவர் பதில் அளித்தார். மேலும், விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும், தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில், 70 வயது ஆன முத்த குடிமகன் என்பதால், வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு தயாநிதி மாறன் பதிலளிக்கச் சிறப்பு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.  இதை தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:  
“எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அது சிறப்பு நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்று இங்கு மாற்றப்பட்டது.
கடந்த மே 17ஆம் தேதி வழக்கை மதித்து நேரில் அதிமுக பொதுச் செயலாளர் ஆஜரானார். மீண்டும் ஒருமுறை இந்த நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்ததால் சட்டத்தை கட்டி காப்பவர் என்பதால் இன்று நேரில் ஆஜரானார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை அவதூறு என்கிறார். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி தான் அதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்தார். இது தேவையற்ற வழக்கு வேண்டுமென்றே குற்றச்சாட்டு வைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சட்டரீதியாக இதை எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்” என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.