இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளது. டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தநிலையில், டி20 தொடரை இந்தியா வென்றது. இதனிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் விராட் கோலி மற்றும் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்தப் போட்டியில் தடுமாறிய இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்டது. டீசன்டான ஓப்பனிங் கிடைத்தாலும் மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. சஹால் மற்றும் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசினர். ஆனாலும் மொய்ன் அலி, டேவிட் வில்லி, பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் ஆகியோர் அணிக்கு தேவையான பங்களிப்பை கொடுத்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 50 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அண களமிறங்கிறது.
கடந்தப் போட்டியில் விக்கெட் இழப்பின்றி வென்ற இந்திய அணிக்கு, இந்தமுறை ஓப்பனிங்கில் இருந்தே பிரச்சினை தான். கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 38.5 ஓவர்கள் முடிவில் 146 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த அணியின் ரீஸ் டாப்லி 9.5 ஓவர்கள் வீசி வெறும் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
கடந்தப் போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா அசத்தியதை போல, இந்த முறை டாப்லி சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற நிலையில் சமனாகியுள்ளது. தொடரை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. முன்னதாக இந்தப் போட்டியை கங்குலி, ரஞ்சித், சச்சின், ஹர்பஜன், முன்னாள் கேப்டன் தல தோனி மற்றும் சின்ன தல ரெய்னா ஆகியோர் மைதானத்தில் பார்த்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-ம.பவித்ரா