தெலங்கானா முதல்வரின் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்

தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளு கே.கவிதாவை நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் அமித் அரோராவிடம்…

தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளு கே.கவிதாவை நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் அமித் அரோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மிக்கு கவிதா லஞ்சம் கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சி.பி.ஐ. 7 பேர் மீது தனது முதல் குற்றப் பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது. தொடர்ந்து கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்தது.

இதையும் படிக்க: தேசிய கணித தொழில்நுட்ப போட்டி: ஒட்டுமொத்த கோப்பையை வென்றது தஞ்சை சரபோஜி கல்லூரி!

இதன்படி, ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்துக்கு, டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. இந்த விசாரணையையொட்டி கவிதா வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை மார்ச் 9ஆம் தேதி கவிதா நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி அமலாக்கத் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.