கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. முதல்கட்சியாக பாமக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்நிலையில், கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், “முதல்வரிடமும் எதிர்கட்சி தலைவரிடமும் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது பற்றிய அவர்களது நோக்கத்தை அறிவிக்குமாறு கோரியுள்ளேன். கோவில்கள் பல்லாண்டு கவனிப்பின்றி பராமரிப்பின்றி இருப்பதை நாம் பார்த்துகொண்டு இருக்கலாகாது. சமூகத்திற்கு இது ஆன்மீக உயிரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து அந்த கடிதத்தில், கோவில் கட்டுவதும் புணரமைப்பதும் ஒரு கலை மட்டுமல்ல, நுட்பமான ஒரு அறிவியலும்கூட. மிகக்குறைந்த செலவில் செய்வதாகக் கூறும் காண்டிராக்டர்கள் கைகளில், தொன்மையான கோவில் கட்டிடவியல், சுவர்சித்திரங்கள் மற்றும் கல்வெட்டுகள் மீட்கமுடியாதபடி சிதைக்கப்படுகின்றன. சுயமாக தங்களை பாதுகாவலர்களாக நியமித்து கொண்டுள்ளவர்களை விட, திருடர்களுக்கு இச்சிலைகளின் மதிப்பு தெரிகிறது போலும். தனக்கு அர்ப்பமாய் தெரியும் ஒன்றினை, அரசு தன்வசம் வைத்திருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும் கோவில்பூசாரிகளின் சம்பளம் சொர்ப்பமாக இருப்பதால், அவர்கள் வேறு வழிகளில் வருவாய் ஏற்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். வறுமையில் வாடுதல் பக்திக்கான தகுதியில்லை. இந்த மனப்பான்மை மாறிட வேண்டும். கோவில்கள் ஆற்றலும், வல்லமையும், ஞானமும் வழங்கும் சக்திவாய்ந்த தலங்கள். அவை சாதி, இனம் & வர்க்கம் தாண்டி அனைவருக்குமானதாய் இருக்க வேண்டும் என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து 11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.