காவல்துறை குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ளதால் பிரதான கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது கூட்டத்தில் ஒருவர் பிரச்சாரத்தை நிறுத்தும்படி சொல்லியதால் அவரை ஒருமையில் பேசியதுடன் காவல்துறை தற்போது ஏவல்துறையாக உள்ளது என்றுள்ளார். மேலும் போலீசார் குறித்து அவதூறாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையினர் குறித்து அவதூறு பேசி மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் சி.வி. சண்முகம் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அறந்தாங்கி காவல்நிலையத்திலும் சி.வி.சண்முகம் மீது திமுகவினர் புகார் அளித்துள்ளனர். தேர்தல் பரப்புரையின் போது, முதலமைச்சரை ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.








