ஒன்பது மாத ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ளதால் பிரதான கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து பந்தய சாலை பகுதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவும் திமுகவும் வாக்குறுதிகளை குப்பையாக வீசி விடுகின்றன என்று குற்றம்சாட்டினார். நீட் தேர்வை ஒழிப்பதாக கூறியவர்கள், நீட்டிற்கு வகுப்பு நடத்துவேன் என பிரச்சாரம் செய்வதாக திமுகவை விமர்சித்த கமல்ஹாசன், மேயராவது தன்னுடைய நோக்கம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.









