மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவீஸ் பதவி வகித்து வருகிறார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள ஒளரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் தரசிவ் என மாற்றுவதற்கு மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நகரங்களின் பெயரை மாற்றும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனை கட்சியினர் ஒளரங்காபாத் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மகா விகாஸ் கூட்டணி அரசு தான் இந்த இரண்டு நகரங்களின் பெயர்களை மாற்றலாம் என முடிவு செய்தது.
உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உத்தவ் தாக்கரே அரசு சம்பாஜிநகர் என்ற மாற்றலாம் என முடிவு செய்தது. தற்போதைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு சத்ரபதியை சம்பாஜிநகர் பெயருக்கு முன் சேர்த்துள்ளது.
தற்போது ஏக்நாத் ஷிண்டேவும், பட்னவீஸும் மட்டும் தான் அமைச்சரவையில் உள்ளனர். அமைச்சரவை விரிவாக்கம் இன்னும் செய்யப்படாமல் உள்ளது.
“பெயர் மாற்ற முடிவு குறித்து அமைச்சரவை எடுத்த முடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு மண்டல, மாவட்ட, தாலுக்கா அளவில் இரு நகரங்களின் பெயர் மாற்றம் செய்யப்படும்” என்று மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயரை டி.பி.பாட்டீல் என மாற்றுவதற்கும் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மகாராஷ்டிராவில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், சிவசேனை அதிருப்தி தலைவராக உருவெடுத்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளும் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு அரசியல் நகர்வுகளின் முடிவில் உத்தவ் தாக்கரே பதவி விலகினார். அதைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.