சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டது. இதனையடுத்து, அருகில் இருக்கும் முக்கிய ரயில் நிலையமான எழும்பூருக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநில திமுக குழுக் கூட்டம் அவைத் தலைவர் மொ. பெரியசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சென்னையிலுள்ள எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.2019ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எழுதிய கடிதத்தில் இதே கோரிக்கையை விடுத்திருந்தார். தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் உரையாற்றிய எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமனும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற திமுக வர்த்தகர் அணி கூட்டத்திலும், இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.