கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை பரிசோதனை செய்யப்பட்ட 20,000க்கும் மேற்பட்டவர்களில் 13.7 சதவீதம் மக்களுக்குக் குறைந்தது 12 வாரங்கள் நீடித்த கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளைக் கண்டறிந்ததாகத் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களில் ஏழில் ஒருவருக்குக் குறைந்தது 12 வாரங்களுக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு “லாங் கோவிட்” என்று பெயரிடப்பட்டுள்ளது. 13 அறிகுறிகளின் பட்டியலில் உடல் சோர்வு, தசை வலி, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை அடங்கும். மேலும் இதில் ஆண்களை (12.7%) விடப் பெண்களே (14.7) அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ONS-இல் சுகாதார பகுப்பாய்வு மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளின் தலைவரான பென் ஹம்பர்ஸ்டோன் கூறுகையில்,“தற்பொழுது அதிகரித்து வரும் லாங் கோவிடை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் இனி வரும் காலங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு விரைவில் அதற்கான தீர்வுகள் கண்டறியப்படும்” என்றார்.
கொரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரிட்டன், கிட்டத்தட்ட 1,27,000 இறப்புகளையும் 43,50,266 புதிதாகப் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கைகளையும் பதிவு செய்துள்ளது.