ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவ மெழுகு சிலையின் மடியில் அமர்ந்து குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி – பசுங்கிளி தம்பதியின் மகளான பிரியதர்ஷினி தனது குழந்தைகளின் காதணி விழாவை வித்தியாசமாக நடத்தியுள்ளார். தாய்மாமன் மடியில் அமர வைத்து குழந்தைகளுக்கு காது குத்தும் நடைமுறை தமிழ்நாட்டில் வழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரியதர்ஷினியின் சகோதரர் பாண்டிதுரை 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மரணமடைந்த நிலையில், அவரைப் போல சிலிகான் சிலையை செய்து அதில் தனது குழந்தைகளை அமர வைத்து காதணி விழாவை நடத்தியுள்ளார்.
அண்மைச் செய்தி: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
முன்னதாக, சிலிகானில் செய்யப்பட்ட பாண்டிதுரையின் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து கூறிய பாண்டிதுரையின் தாய் பசுங்கிளி, சகோதரியின் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்பது தனது மகனின் நீண்ட நாள் கனவாக இருந்ததாக கூறினார்.
எனினும், எதிர்பாராத விபத்தில், பாண்டிதுரை உயிரிழந்தால், 5 லட்சம் ரூபாய் செலவில் அவரைப் போல தத்ரூபமான சிலையை பெங்களூருவில் செய்து எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதன் மூலம், சகோதரி குழந்தைகளுக்கு தனது மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்ற தனது மகனில் ஆசையும், தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்திக்கொள்ள வேண்டும் என்ற பேரக் குழந்தைகளின் ஆசையும் நிறைவேறியுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








