நாகர்கோவில் அருகே, குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்துக் கொண்ட காவலர், தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வலிய மார்த்தாண்டம், கோணம் காடு பகுதியைச் சேர்ந்தவர் அருள் ஜாக்சன் (40) .இவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள பெண்ணுக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜாக்சன் தினமும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் சண்டை போடுவது வழக்கம்.
அதே போல் இன்றும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் ஜாக்சன் வீட்டை தீவைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருநெல்வேலி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தபோது இவர் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்வதாக வந்த புகாரை அடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







