குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்று இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக பழங்குடியின பெண் ஒருவர் குடியரசு தலைவர் பதவியேற்க உள்ளார்.
16வது குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் குழுமத்தில் 776 எம்.பிக்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றிருந்தனர். நாடாளுமன்ற வளாகம், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற வளாகங்கள் என மொத்தம் 31 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெந்நது. மொத்தம் உள்ள 4,809 வாக்குகளில் 4,754 வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 63ல் எண்ணப்பட்டன. காலை 11 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் திரௌபதி முர்மு வெற்றியை இரவு தேர்தல் நடத்தும் அலுவலரான பி.சி.மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குடியரசு தலைவர் தேர்தலில் சுமார் 64 சதவீத வாக்குகளை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 4,754 வாக்குகளில் செல்லாத வாக்குகள் 53. மீதமுள்ள 4,701 வாக்குகளில் திரௌபதி முர்வுக்கு 2,824 வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்குகளின் மொத்த மதிப்பு 6,76,803 ஆகும். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா சுமார் 36 சதவீத வாக்குகளையே பெற்றார்.
எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும்கூட திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் இடம் பெறாத பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தன. இதனால் குடியரசு தலைவர் தேர்தலில் அவர் எளிதில் வெற்றி பெறுவார் என கருதப்பட்டது. இந்நிலையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் பெற்று நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு. நாட்டின் வரவாற்றில் முதல்முறையாக பழங்குடியின பெண் ஒருவர் குடியரசு தலைவர் ஆவது இதுவே முதல்முறையாகும். வரும் 25ந்தேதி 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார்.
அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.







